காங்கிரஸ் தேர்தல்: நிர்வாகிகள் எங்கெல்லாம் வாக்களிக்கலாம்?
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாங்கள் பணியாற்றும் மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களில் வாக்களிக்க முடியாது என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாங்கள் பணியாற்றும் மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களில் வாக்களிக்க முடியாது என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் 22 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு அக்கட்சியைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவும் சசி தரூரும் நேரடியாக மோதுகின்றனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பொதுச் செயலாளர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள், காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் என 9,000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
இதையும் படிக்க | கார்கேவுக்கு கிடைக்கும் மரியாதை எனக்கு இல்லை: சசி தரூர் ஆதங்கம்!
வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொறுப்பாளர்கள், செயலாளர்கள் மற்றும் இணை செயலாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து வாக்களிக்க முடியாது என்றும் அவரவர் சொந்த மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களிலோ அல்லது தில்லியில் உள்ள தலைமை அலுவலகத்திலோ வாக்களிக்கலாம் என்றும் தேர்தல் நடத்தும் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்துள்ளார்.
தேர்தல் பாரபட்சமின்றி வெளிப்படைத்தன்மையுடன் நடப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது காங்கிரஸ் மாநில பொறுப்பாளர்கள், செயலாளர்கள் மற்றும் இணை செயலாளர்கள் தாங்கள் பணியாற்றும் அலுவலகங்களில் வாக்களிக்க முடியாது. சொந்த மாநிலங்களில் உள்ள அலுவலகங்களில் வாக்களிக்கலாம் அல்லது தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் யார் வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்.
இதையும் படிக்க | காங். தேர்தலில் கார்கேவுக்கு சோனியா காந்தி ஆதரவா?