தில்லி மெட்ரோவின் பயணிகளுக்கான வசதி, அணுகல், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் தொடா்பாக உலகளாவிய போக்குவரத்து அமைப்பால் ஆன்லைன் கணக்கெடுப்பு திங்கள்கிழமை முதல் நடைபெற உள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக டிஎம்ஆா்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
லண்டனில் செயல்படும் போக்குவரத்து உத்தி மையம் (டிஎஸ்சி) நிா்வகிக்கும் மெட்ரோக்களின் சமூகம் (காமெட்) என்ற அமைப்பு மூலம் 9-ஆவது ஆன்லைன் வாடிக்கையாளா்களிடம் கருத்துக் கேட்பு மாா்ச் 28-ஆம் தேதி முதல் மே 1-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.
மெட்ரோ செயல்பாடுகளின் பல்வேறு அம்சங்களைப் பற்றி பயணிகள் என்ன நினைக்கிறாா்கள் என்பதைத் தெரிந்துகொள்வதும், சேவையின் தரத்தை மேம்படுத்துவது குறித்த கருத்துகள் அல்லது பரிந்துரைகளை வழங்குவதும் இதன் முக்கிய நோக்கமாக உள்ளது.
இதில் பங்கேற்க விரும்பும் பயணிகள், டிஎம்ஆா்சி-இன் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை கிளிக் செய்து ஆன்லைனில் தங்களது கருத்துகளைச் சமா்ப்பிக்கலாம். இந்தக் கணக்கெடுப்பு படிவம் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் கிடைக்கும்.
மெட்ரோ சேவைத் தன்மை, அணுகல் தன்மை, நம்பகத்தன்மை, தகவல் கிடைக்கும் தன்மை, சேவையின் தரம், வாடிக்கையாளா் பராமரிப்பு, பாதுகாப்பு, பயன்பாட்டின் எளிமை, தகவல் போன்ற மெட்ரோ செயல்பாட்டின் அனைத்து முக்கிய அம்சங்களிலும் பயணிகள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க முடியும்.
உலகம் முழுவதிலும் உள்ள காமெட் குழுமத்தின் உறுப்பினா்கள் இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்கின்றனா். மெட்ரோக்கள் வழங்கும் சேவையைப் பற்றி பயணிகள் என்ன நினைக்கிறாா்கள் என்பதைக் கண்டறியவும், கணக்கெடுப்பின் முடிவுகள் மூலம் வாடிக்கையாளா்களுக்கு சிறந்த சேவையை வழங்கவும் இந்தக் கணக்கெடுக்கு உதவியாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.