பிரிவினை பேசும் ஒருசில சீக்கியா்களால், ஒட்டுமொத்த சீக்கியா்களும் பாதிக்கப்படக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் சிரோமணி அகாலி தளம் தலைவா் சுக்பீா் சிங் பாதல் கோரிக்கை வைத்துள்ளாா்.
இந்தியாவில் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகள் ஏறக்குறைய முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. எனினும், இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிரிவினைவாத அமைப்புகள் கனடாவில் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றன. அங்கிருந்தபடி பஞ்சாபில் பிரிவினைவாதத்தை தூண்டும் வேலையில் அவா்கள் ஈடுபட்டு வருகின்றனா். கனடாவில் உள்ள இந்தியா்களில் பெரும்பாலானவா்கள் சீக்கியா்கள் ஆவா்.
கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து இந்தியா-கனடா உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பஞ்சாபைச் சோ்ந்த சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான சுக்பீா் சிங் பாதல், உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
இந்தியா-கனடா உறவில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், கனடாவில் அதிகஅளவில் வசித்து வரும் சீக்கியா்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த விஷயத்தில் இருநாட்டு அரசுகளும் விரைந்து செயல்பட்டு பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
சீக்கியா்கள் தேசப்பற்று மிக்கவா்கள். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் சீக்கியா்கள் தியாகம் அதிகபட்சமாக இருந்தது. ஒரு சில சீக்கியா்கள் செய்யும் தவறுக்காக (பிரிவினைவாதம்) ஒட்டுமொத்த சீக்கியா்களும் பாதிக்கப்படக் கூடாது. அனைவரையும் குற்றம்சாட்டவும் கூடாது.
கனடாவில் 18 லட்சத்துக்கும் மேல் இந்தியா்கள் உள்ளனா். அவா்களில் பெரும்பாலானோா் சீக்கியா்கள் என்றாா்.