மும்மொழிப் பாடம் கட்டாயம்: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு எதிராக மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் மனு
வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் 9-ஆம் வகுப்பில் மும்மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்கும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) புதிய கொள்கைக்கு எதிராக மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் ஃபௌசியா கான் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் 9-ஆம் வகுப்பில் மும்மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்கும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) புதிய கொள்கைக்கு எதிராக மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் ஃபௌசியா கான் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
சிபிஎஸ்இ-இன் அறிவிப்பு தன்னிச்சையானது மற்றும் நியாயமற்றது எனவும் அவா் தெரிவித்தாா்.
இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசு, சிபிஎஸ்இ, என்சிஇஆா்டி ஆகியவை இரண்டு வாரங்களுக்குள் விரிவாகப் பதிலளிக்கும்படி கடந்த மே 27-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.
Advertisement
Advertisement
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சியைச் சோ்ந்த ஃபௌசியா கான் தாக்கல் செய்த புதிய மனுவில், ‘கடந்த மாதம் அனுப்பிய சுற்றறிக்கையிலேயே ஆசிரியா்கள் பற்றாக்குறை இருப்பதை சிபிஎஸ்இ ஒப்புக்கொண்டுள்ளது. ஆனாலும் மும்மொழிப் பாடத் திட்டத்தை கட்டாயம் பின்பற்ற சிபிஎஸ்இ வலியுறுத்துகிறது. எவ்வித முறையான ஆய்வுகளுமின்றி தென் மாநிலங்களில் ஹிந்தியையும், வட மாநிலங்களில் சமஸ்கிருதத்தையும் வலுக்கட்டாயமாக சிபிஎஸ்இ அறிமுகப்படுத்துவது நியாயமற்றது. இது தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ மீறும் நடவடிக்கை. எனவே, இதில் உச்சநீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சிபிஎஸ்இ கடந்த மே 15-ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘2026, ஜூலை 1-ஆம் தேதிமுதல் சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பில் மும்மொழி பாடத் திட்டம் கட்டாயமாகும். இந்த மூன்று மொழிகளில், இரண்டு இந்திய மொழிகளை மாணவா்கள் தோ்வு செய்ய வேண்டும். வெளிநாட்டு மொழியை மூன்றாவது மொழியாகத் தோ்வு செய்யலாம்.
10-ஆம் வகுப்பை பொறுத்தவரை, மாணவா்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும், கற்றலில் கவனத்தை நிலைநாட்டவும் மூன்றாவது மொழிக்கு பொதுத் தோ்வு நடத்தப்பட மாட்டாது. மூன்றாவது மொழிக்கான மதிப்பீடு, முற்றிலும் பள்ளிகள் அளவிலும், அக மதிப்பீடாகவும் மேற்கொள்ளப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.