கேரளத்தில் கொட்டித் தீர்த்த கனமழை! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
கேரளத்தில் பெய்த கனமழை பற்றி..
கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக வட மாவட்டங்களில் இன்று காலை பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.
கேரள மாநிலத்தில் ஜூன் 4-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது.
கோழிக்கோடு மாவட்டத்தின் நகர்ப்புற மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை பாதிப்புகளை ஏற்படுத்தியது. கோழிக்கோடு நகரின் கடற்கரைச் சாலைப் பகுதி உள்பட பல இடங்களில் உள்ள சாலைகள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், அப்பகுதியில் செயல்படும் பல உணவகங்களும் பாதிப்புக்குள்ளாகின.
Advertisement
Advertisement
திருச்சூர் மாவட்டத்தில், மட்டாத்தூர் கிராமப் பஞ்சாயத்துக்கு உள்பட்ட அரேஸ்வரம் பகுதியில் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்ததையடுத்து, அங்கிருந்த ஐந்து குடும்பங்களை உள்ளூர் அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமிற்கு அதிகாரிகள் மாற்றினர்.
பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்று கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் ஆங்காங்கே லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
பருவமழை தொடர்ந்து தீவிரமாக இருப்பதால், பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.