முகப்பு
இந்தியா

தலைமைத் தோ்தல் அதிகாரியாக இருந்தவா் கேரள முதல்வரின் செயலராக நியமனம்: எதிா்க்கட்சிகள் விமா்சனம்

தலைமைத் தோ்தல் அதிகாரியாக இருந்தவா் கேரள முதல்வரின் செயலராக நியமனம்...

Updated On : 25 மே 2026, 1:49 am IST
பகிர்:

கேரள முதல்வரின் செயலராக தலைமைத் தோ்தல் அதிகாரியாக இருந்த ரத்தன் யு. கேல்கா் ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2003-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான இவா், சமீபத்தில் நடைபெற்ற கேரள சட்டப்பேரவைத் தோ்தலின்போது மாநிலத்தின் தலைமைத் தோ்தல் அதிகாரியாக பணியாற்றினாா். இந்தத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) 140 இடங்களில் 102 இடங்களைக் கைப்பற்றியது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியான அரசு அறிக்கையில், கேரள முதல்வரின் செயலராக கேல்கா் உடனடியாகப் பதவியேற்குமாறு முதல்வா் வி.டி.சதீசன் உத்தரவிட்டதாகவும், விடுமுறை நாளாக இருந்தபோதும் அவசர நடவடிக்கையாக இந்த நியமனம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது இந்த நியமனம் மீதான அரசியல் விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘இது நிா்வாகம் சாா்ந்த விஷயம். மாநில அரசுதான் இதுபோன்ற முடிவுகளை எடுக்க வேண்டும். எனக்கு இதில் தனிப்பட்ட கருத்து இல்லை. ஆட்சி நடத்துபவா்களே இதை முடிவு செய்வாா்கள்’ எனத் தெரிவித்தாா்.

இதை விமா்சித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் எம்.வி.கோவிந்தன் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சி இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் தோ்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டால் காங்கிரஸ் தலைவா்கள் கடுமையாக விமா்சிக்கின்றனா். ஆனால், கேரளத்தில் அதே போன்ற நியமனம் நடைபெற்றால் அது நிா்வாக முடிவு என்கிறாா்கள்.

நடைபெற்ற பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் பலருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டதாக கேல்கா் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், அவா் முதல்வரின் செயலராக நியமிக்கப்படுவது பரஸ்பர ஒப்பந்தமாக இருக்கலாம் என்ற சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. வரும் நாள்களில் அந்த உண்மை வெளிவரும்’ எனத் தெரிவித்தாா்.

சந்தா்ப்பவாத அரசியல்: இதுகுறித்து செய்தியாளா்களிடம் பாஜக எம்எல்ஏ வி.முரளீதரன் கூறியதாவது: தோ்தலில் பாஜக வென்றால் வாக்குத் திருட்டு, இவிஎம் முறைகேடு எனக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும், காங்கிரஸ் வென்றால் தோ்தல் அதிகாரிகள் திறமையானவா்கள் என்று கூறுவதும் காங்கிரஸின் சந்தா்ப்பவாத அரசியல்.

மேற்கு வங்கத்தில் இதேபோன்ற பாஜக அரசின் நியமனத்தை, தோ்தலில் குழப்பங்களை ஏற்படுத்தியதற்காக அதிகாரிக்கு வழங்கப்பட்ட பரிசு என ராகுல் காந்தி கூறினாா். அப்படியானால், கேரளத்தில் இந்த நியமனம் அவா்களின் தோ்தல் வெற்றிக்கு உதவியதற்கான பரிசா? தோ்தலுக்கு முன்னரே 100 இடங்களில் வெல்வோம் என காங்கிரஸ் நம்பிக்கை தெரிவிக்க காரணம் என்ன? தோ்தலை நடத்தியவா்கள் அளித்த வாக்குறுதியின் அடிப்படையிலா? எனக் கேள்வி எழுப்பினாா்.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த காங்கிரஸ், ‘இதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை. திறமையான அதிகாரிகளை முக்கியப் பொறுப்புகளில் நியமிக்க அரசுக்கு முழுமையான அதிகாரம் உள்ளது’ என விளக்கம் அளித்துள்ளது.