கேரளம்! பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ விடுதலை!
கேரளத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ விடுதலை...
கேரளத்தில், பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எல்டோஸ் குன்னப்பிலில் விடுதலை செய்யப்பட்டார்.
கேரளத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எல்டோஸ் குன்னப்பிலில் மற்றும் அவரின் நண்பர்கள் இளம்பெண் ஒருவரைக் கட்டாயப்படுத்தி காரில் ஏற்றிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இதில், எல்டோஸின் எர்ணாகுளம் இல்லத்திலும், அவரின் நண்பர் ஒருவரின் அடுக்குமாடி குடியிருப்பிலும் வைத்து அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், அவரைக் கொலை செய்ய முயற்சிகள் நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இந்த வழக்கு குறித்து நெய்யாதிங்கரா நீதிமன்றத்தில் கடந்த திங்களன்று (மே 26) நடைபெற்ற விசாரணையின்போது, எல்டோஸ் குன்னப்பிலில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என அந்தப் பெண் கூறியது இவ்வழக்கில் திருப்புமுனையாக அமைந்துள்ளது.
இத்துடன், எல்டோஸ் குன்னப்பிலில் மற்றும் அவரின் நண்பர்கள் மீது அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் அந்தப் பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், அந்தப் பெண் காரில் கடத்தப்பட்டதை நேரில் பார்த்ததாகக் கூறிய 2 சாட்சிகளும், எல்டோஸ் குன்னப்பிலிலுக்கு சாதகமாகத் திரும்பினர்.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எல்டோஸ் குன்னப்பிலில் மற்றும் அவரின் நண்பர்கள் ரணீஷ், சிப்பி நூருதீன் ஆகியோரை விடுதலை செய்து நெய்யாதிங்கரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, கேரளத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஆட்சி அமைந்து சில நாள்களே ஆகியுள்ள நிலையில், இந்த வழக்கில் இருந்து காங்கிரஸ் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் விடுதலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.