தானே புயல் நிவாரண நிதியில் முறைகேடு: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு மீது அரசுக்கு நோட்டீஸ்
தானே புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிவாரண நிதியில் முறைகேடு மற்றும் மோசடி செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தானே புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிவாரண நிதியில் முறைகேடு மற்றும் மோசடி செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மரக்காணத்தைச் சேர்ந்த ஜி.விஜயன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்தில் தானே புயல் தாக்கியது.
தமிழக கடலோர மாவட்டங்கள் பல பாதிக்கப்பட்டன. இதில், குறிப்பாக விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. பல்வேறு விவாசய நிலங்களும் சேதமடைந்தன.
Advertisement
Advertisement
தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்க மாநில மற்றும் மத்திய அரசுகள் முன்வந்தன. அதில், ஐந்து ஏக்கருக்கு கீழ் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளின் பாதிக்கப்பட்ட நிலங்களை அளந்து அதற்கேற்ப நிவாரண நிதி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த நிவாரண நிதி ஏழை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். ஆனால், அவை பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை.
அதிகாரிகள் மற்றும் வசதி படைத்தவர்கள் கூட்டு சேர்ந்து, 100 ஏக்கருக்கு மேல் நிலவம் வைத்துள்ளவர்களுக்கு நிவாரண நிதியை வழங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை அதிகாரிகள் தவறாக பயன்படுத்தியுள்ளனர். அதில், முறைகேடு மற்றும் மோசடி செய்துள்ளனர்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கடந்த ஜனவரி மாதம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தேன். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, தானே புயல் நிவாரண நிதியில் முறைகேடு மற்றும் மோசடி செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை (ஏப்.25) விசாரணைக்கு வந்தது.
மனுவுக்கு நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உள்பட நான்கு பேருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.