புதுதில்லி: தில்லியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று புதன்கிழமை இரவு முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் இல்லத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். முதல்வரின் இல்லத்திற்கு வெளியே கூடியிருந்தவர்களை தில்லி போலீஸார் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனக். இதையடுத்து அங்கு அமைதி நிலவியது.
வடகிழக்கு தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பாளர்கள் - ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை இரண்டு காவலர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். வன்முறையில் காயமடைந்த 175க்கும் மேற்பட்டோர் தில்லி ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்த சம்பவம் காரணமாக தலைநகர் தில்லியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் துணை ராணுவ படையினர், தில்லி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் வடகிழக்கு தில்லியில் மஜ்பூர், ஜாப்ராபாத், சந்த்பாக், கர்வால் நகர் ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவா்கள் திரண்டு புதன்கிழமை நள்ளிரவில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் இல்லத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.
அப்போது வடகிழக்கு தில்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும், கலவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தில்லி அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து குடிமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், அனைத்து மீட்பு நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மருத்துவமனைகளை அடைய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். கூட்டத்தைக் கலைக்க போலீஸாா் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனா். 41 மாணவா்கள் சிவில் லைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அவா்களில் பலா் விடுவிக்கப்பட்டதாகவும், சிலரை விடுவிக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
முதல்வர் கேஜரிவால் தனது இல்லத்தில், உள்ளூர் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் வடகிழக்கு தில்லியின் வன்முறை பாதிப்புக்குள்ளான அதிகாரிகளின் அவசரக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினர். பின்னர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருமாறும், அமைதியை மீட்டெடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.