தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழ் மாநில தேசிய லீக் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியது:
திமுக ஆட்சியில் சிறுபான்மை மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப் பட்டன. இப்போது ஆட்சியில் இல்லாவிட்டாலும், சிறுபான்மை சமுதாய மக்களின் கோரிக்கைக்காக தொடர்ந்து போராடி வருகிறோம்.
மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சி இருப்பதால் திடீரென புதுப்புது அறிவிப்புகளை வெளியிடுகிறது. 3 ஆண்டு கால பாஜக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அதை மூடி மறைக்கவே திடீர் அறிவிப்புகளை வெளியிடுகிறது. இறைச்சிக்காக கால்நடைகள் விற்பனைக்குத் தடை என்பதும் அந்த அடிப்படையிலான அறிவிப்புதான். இதைப் பெரும்பாலான முதல்வர்கள் கண்டித்துள்ளனர். கேரள மாநிலத்தில் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றுவதற்காக சிறப்பு சட்டப்பேரவையையே கூட்டியுள்ளனர்.
ஆனால், தமிழக முதல்வர் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே அதிமுகவினர் அமைதியாக உள்ளனர். தற்போது நான் செல்லும் இடமெல்லாம் எப்போது ஆட்சி மாற்றம் ஏற்படும் எனக் கேட்கின்றனர். விரைவில் ஆட்சி மாற்றம் வரப் போகிறது என்றார்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், தமிழ் மாநில தேசிய லீக் பொதுச்செயலாளர் திருப்பூர் அல்தாப், மாவட்டச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பி.கே.சேகர்பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.