தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயலைச் சேர்ந்த 7 மீனவர்கள் படகு பழுதானதால் மணப்பாடு பகுதியில் நடுக்கடலில் தத்தளித்தனர். அவர்களை கடலோரக் காவல் படையினர் வியாழக்கிழமை பாதுகாப்பாக மீட்டனர்.
புன்னக்காயல் மீனவர்கள் ஜேசுதன், நிவான், டேனியல், பின்ஸ்சோ, ஜேசுராஜ், சுபேன்தன், வினோத் ஆகிய 7 பேரும் ஒரு நாட்டுப் படகில் புதன்கிழமை இரவு மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது நள்ளிரவு திடீரென படகில் என்ஜின் பழுதாகி 7 பேரும் கடலில் தத்தளித்தனர்.
இதுகுறித்து சக மீனவர்களுக்கும், கடலோரக் காவல் படையினருக்கும் தொலைத்தொடர்பு கருவிகள் மூலம் அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான "அபிராஜ்' என்ற ரோந்துக் கப்பல் மூலம் மீனவர்களைத் தேடும் பணி நடைபெற்றது.
அப்போது, மணப்பாடு கலங்கரைவிளக்கம் பகுதியில் இருந்து கிழக்கே ஏறத்தாழ 12 கடல் மைல் தொலைவில் படகு நிற்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சென்ற கடலோரக் காவல் படையினர் மீனவர்களை பத்திரமாக மீட்டு வியாழக்கிழமை காலை கரைக்கு கொண்டு வந்தனர்.
என்ஜின் பழுதானதால் படகு திசை மாறிச் சென்றதாக மீனவர்கள் கடலோரக் காவல் படையினரிடம் தெரிவித்தனராம். மீட்கப்பட்ட 7 மீனவர்களையும், அவர்கள் சென்ற படகையும் வியாழக்கிழமை காலை தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு கொண்டு வந்த கடலோர காவல் படையினர், மீனவர்களை மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.