நாடகக் கலை என்பது நமது வாழ்வியலோடு தொடர்புடைய மரபு சார்ந்த கலை என திரைப்பட நடிகர் எம்.சண்முகராஜா பேசினார்.
திருவலத்தை அடுத்த சேர்க்காட்டில் செயல்பட்டுவரும் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகமும், தேசிய நாடகப் பள்ளி பெங்களூரு மையமும் இணைந்து ஒரு மாத கால இலவச உண்டு, உறைவிட நாடகப் பயிலரங்கை கடந்த மாதம் 22-ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கியது. இதில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 28 மாணவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்று வந்தனர். பயிலரங்கின் நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.முருகன் தலைமை வகித்தார். பதிவாளர் வெ.பெருவழுதி, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் எஸ்.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜி.ரமேஷ் வரவேற்றார். விழாவில் நடிகர் எம்.சண்முகராஜா பேசியதாவது:
நாடகக் கலை என்பது வாழ்வியலோடு தொடர்புடைய மரபு சார்ந்த கலையாகும்.
ஒரு நாடகக் கலைஞன் உடல், குரல், மனம் ஆகிய மூன்றிலும் முறையான பயிற்சி பெற்றால் தான் முழுமையான நாடகக் கலைஞனாக மாற முடியும். வேலூர் மாவட்டம் போல் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நாடகப் பயிலரங்கு தொடர்ந்து நடத்த வேண்டும்.
திரைப்படத்தைப் போல் நாடகக் கலையை கற்றுத் தர ஆட்கள் இல்லை என்ற குறை இருந்தாலும், நாடகக் கலை அழியாது என்றார்.
விழாவில், தேசிய நாடகப்பள்ளி பெங்களூரு மைய இயக்குநர் பசவலிங்கய்யா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், நாடக சங்க துணைப் பொதுச்செயலாளர் எஸ்.கருணா, கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறை தலைவர் எம்.ரவிச்சந்திரன், நாடகப் பயிலரங்கு இயக்குநர் பிரளயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.