சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கருத்தராஜாபாளையத்தில் ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக பணிக்கு வராததால், பள்ளியில் ஆய்வுக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர், வகுப்பறையில் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
கருத்தராஜாபாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் கட்டப்பட்டுவரும் வகுப்பறை கட்டடப் பணியை ஆய்வு நடத்துவதற்காக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் வியாழக்கிழமை பள்ளிக்குச் சென்றிருந்தார். ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டத்தால் பள்ளி ஆசிரியர்கள் அப்போது பணியில் இல்லை.
மாணவர்கள் பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த ஆட்சியர் நேரடியாக ஒரு வகுப்பறைக்குள் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர், மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடம் நடத்தி ஒவ்வொருவராக புத்தகத்தை படிக்க வைத்தார்.
இந் நிகழ்வு ஆய்வுக்கு உடன் வந்த அதிகாரிகளையும், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பின்னர், பள்ளியிலிருந்து கிளம்பிய ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், அந்த ஊராட்சியில் கட்டப்படும் அரசு குடியிருப்பு வீடு கட்டுமானப் பணி, குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.
கோட்டாட்சியர் ம.செல்வன், வட்டாட்சியர் கேசவன் உள்ளிட்ட வருவாய் அலுவலர்கள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.