மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை குறைக்கப்பட்டுள்ளதற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் கிறிஸ்தவ மாணவர்களுக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகைகளை முன்னறிவிப்பு ஏதுமில்லாமல் திடீரென்று குறைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது கடும் கண்டத்துக்குரியது.
அரசு ஒதுக்கீடு மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு, வழங்கப்பட்ட ரூ.12.5 லட்சம் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு ரூ. 4 லட்சமாகவும், பொறியியல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ. 85 ஆயிரம் உதவித்தொகை, ரூ.70 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையின் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு, அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 2010-2011-ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் ஆக வேண்டும் என்ற சிறந்த நோக்குடன் அளிக்கப்பட்ட கட்டணச் சலுகை பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் பொன்னான வாய்ப்பும் ஏற்பட்டது.
ஆனால், ஏற்கெனவே குமுறிக் கொண்டிருக்கும் மாணவர் சமுதாயத்தின் தவிப்பில் மேலும் எண்ணெய் ஊற்றும் வகையில், அதிமுக அரசு கல்வி உதவித்தொகையைக் குறைந்துள்ளது. இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். கல்விஉதவித் தொகை குறைப்பை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
சபரிமாலாவுக்குப் பாராட்டு: நீட் தேர்வை எதிர்த்து ஆசிரியை சபரிமாலா ராஜிநாமா செய்துள்ளார். அவர் உணர்வை மதிப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.