வீரராகவர் கோயிலில் பிரேமலதா விஜயகாந்த் வழிபாடு
திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் புரட்டாசி அமாவசையையொட்டி தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு செய்தார்.
திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் புரட்டாசி அமாவசையையொட்டி தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு செய்தார்.
இக்கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக விளங்குகிறது. அதோடு இங்கு வழிபாடு செய்தால் தீராத நோய்கள் தீரும் என்பதோடு நிறைவேறாத காரியங்கள் அனைத்தும் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால், இக்கோயிலுக்கு முக்கிய அமாவசை நாள்களில் பக்தர்கள் வந்து வழிபாடு செய்கின்றனர்.
இந்நிலையில், மகாளய அமாவாசை நாளையொட்டி வீரராகவர் கோயிலுக்கு விஜயகாந்த் பிரேமலதா திங்கள்கிழமை மாலை வந்தார். அதைத் தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் செல்லும் சிறப்பு தரிசன வழியாகச் சென்று மூலவரை தரிசனம் செய்தார். பின்னர் திருக்குளத்திற்கு சென்று பால், வெல்லம் ஆகியவற்றைக் கரைத்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினார். அதைத் தொடர்ந்து அங்கு வழிபாடு செய்வதற்கு வந்த திருநங்கைகளிடம் கலந்துரையாடினார்.
அப்போது, தேமுதிக மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கட்சி நிர்வாகிகள் புஜ்ஜி முரளிகிருஷ்ணன், ஆயில் சரவணன், மணிகண்டன், கீழனூர் சுந்தர் ஆகியோர் உடன் இருந்தனர்.