கயத்தாறு சிஆர்பிஎஃப் வீரர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: ஸ்டாலின் வழங்கினார்
காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த, தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு சவலாப்பேரியைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன்
காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த, தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு சவலாப்பேரியைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
சவலாப்பேரியைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தார். அவரது வீட்டுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை சென்று, வீட்டில் வைக்கப்பட்டிருந்த சுப்பிரமணியன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவரது மனைவி கிருஷ்ணவேணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து, ரூ.2 லட்சம் நிதியுதவியை கிருஷ்ணவேணியிடம் ஸ்டாலின் வழங்கினார்.
திமுக மாநில மகளிரணி செயலர் கனிமொழி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கீதா ஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, சட்டப்பேரவை முன்னாள் தலைவர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கருப்பசாமி பாண்டியன், மாலைராஜா உள்பட திமுக நிர்வாகிகள் திரளானோர் உடனிருந்தனர்.