முகப்பு
தமிழ்நாடு

சின்னத்திரை நடிகை சித்ரா கணவர் ஹேமநாத் ஜாமீன் கோரிய வழக்கு: காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம்உத்தரவு

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் ஜாமீன் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்க  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Updated On : 7 ஜனவரி 2021, 1:13 pm IST
சென்னை உயர்நீதிமன்றம்
பகிர்:


சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் ஜாமீன் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்க  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் நடத்திய விசாரணைக்குப் பின், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர். 

இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஹேம்நாத், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 

Advertisement

Advertisement

அதில் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க கூடாது எனக் கூறி, சித்ரா மீது சந்தேகம் கொண்டதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தனக்கு எதிராக காவல்துறையினர் கூறும் குற்றச்சாட்டு பொய்யானது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் நாங்கள் பதிவு திருமணம் செய்து கொண்டோம். தன்னோடும், தனது குடும்பத்தினரோடும் சித்ரா அன்போடு பழகியதை சித்ராவின் தாய் விரும்பவில்லை. தனக்கும், சித்ராவுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எந்த குற்றமும் செய்யாததால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட்டு , வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பாக பதிலளிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என  தெரிவிக்கப்பட்டது. 

அப்போது சித்ராவின் பெற்றோர் தரப்பில் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக  தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரை எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

பின்னர், இந்த மனு குறித்து வரும் ஜனவரி 18-ஆம் தேதிக்குள் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.