பல்லடம்: தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயார் என்று உழவர் உழைப்பாளர் கட்சி அறிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையில் உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைமை அலுவலகமான உழவாலயத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்லமுத்து சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது,
உழவர் உழைப்பாளர் கட்சி திமுக கூட்டணியில் தான் அங்கம் வகித்து வருகிறது. காங்கிரஸ், கம்யூணிஸ்ட் போன்ற பெரிய கூட்டணி கட்சிகளுடன் திமுக இன்னும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
எங்களை போன்ற தோழமை கட்சிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று நம்புகிறோம். அவர்களின் அழைப்பிற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் தயாராகத் தான் உள்ளோம். எந்த முடிவாக இருந்தாலும் முடிவு தெரிந்த பின்னர் தான் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். என்றாலும் வரும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் உழவர் உழைப்பாளர் கட்சி நிச்சயம் போட்டியிடும் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை பலமுறை அமைச்சர் தங்கமணியை சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். அதே கோரிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசியுள்ளேன்.
எனது கோரிக்கையை ஏற்று விவசாய பயிர் கடன்களை ரத்து செய்த தமிழக அரசுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
உடன் மாநில செயலாளர் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன், மாநில பொருளாளர் திருப்பூர் பாலசுப்பிரமணியம், திருப்பூர் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் இருந்தனர்.