முகப்பு
தமிழ்நாடு

கருணாநிதி செம்மொழி தமிழ் விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

2010 முதல் 2019-ஆம் ஆண்டுகள் வரையிலான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் வழங்கும் விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழறிஞர்களுக்கு விருது

Updated On : 22 ஜனவரி 2022, 2:51 pm IST
பகிர்:

சென்னை: 2010 முதல் 2019-ஆம் ஆண்டுகள் வரையிலான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் வழங்கும் விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கினார்.

மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் 2010 முதல் 2019 வரையிலான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளுக்கான நபர்களின் பட்டியல் கடந்த ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதனையடுத்து, தமிழறிஞர்கள் மற்றும் தமிழ்நாட்டு பெருமக்களின் முன்னிலையில் மாநில அளவிலான தமிழ்மொழி சார்ந்த விழாவில் கூடிய விரைவில் இவர்களுக்கு விருது வழங்கப்படும் என்று அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. 

Advertisement

Advertisement

இந்நிலையில், 2010 முதல் 2019 வரை கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விருதாளர்களுக்கு சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.

மேலும், விருதுகள் பெற்றவர்களுக்கு விருதுடன் தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றுடன், கருணாநிதி அவர்களின் சிறிய அளவிலான சிலையும் வழங்கப்பட்டது.

2010 முதல் 2019 வரையிலான விருது கருணாநிதி பெற்றவர்களின் பெயர் பட்டியல்: 

2010: முனைவர் வீ.எஸ்.இராஜம், (முன்னாள் மூத்த விரிவுரையாளர், தெற்கு ஆசிய பிராந்திய ஆய்வுகள் துறை, பென்சில்வேனியா பல்கலைக்கழகம்).

2011: பேராசிரியர் பொன், கோதண்டராமன் (மேனாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை).

2012: பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி (மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்).

2013: பேராசிரியர் ப. மருதநாயகம் (மேனாள்இயக்குநர், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம்,மேனாள் பதிவாளர்,புதுவைப் பல்கலைக்கழகம்).

2014: பேராசிரியர் கு. மோகனராசு (மேனாள் பேராசிரியர்&தலைவர். திருக்குறள்ஆய்வுமையம், சென்னைப்பல்கலைக்கழகம், சென்னை).

2015: பேராசிரியர் மறைமலை இலக்குவனார்(மேனாள் தமிழ்ப்பேராசிரியர். மாநிலக்கல்லூரி).

2016: பேராசிரியர் கா. ராஜன் (மேனாள் பேராசிரியர்,வரலாற்றுத் துறை, புதுவைப் பல்கலைக்கழகம்).

2017: பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் (ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் மற்றும் தமிழ் ஆய்வுக் கழகத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர்).

2018: கவிஞர் ஈரோடு தமிழன்பன் (மேனாள் தமிழ்ப் பேராசிரியர்,புதுக் கல்லூரி, சென்னை).

2019: பேராசிரியர் கு.சிவமணி (மேனாள்முதல்வர், கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர் மற்றும் திருவள்ளுவர் கல்லூரி,நெல்லை).

ஆகிய விருதாளர்களுக்கு விருதுடன் ரூ.10 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், வெண்கலத்தாலான கருணாநிதி அவர்களின் திருவுருவச்சிலையும் முதல்வர் வழங்கி கௌரவித்தார்.

2010 ஆம் ஆண்டிற்கான விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட முனைவர் வீ.எஸ்.ராஜம் (மூத்த விரிவுரையாளர், தெற்கு ஆசிய பிராந்திய ஆய்வுகள் துறை, பென்சில்வேனியா பல்கலைக்கழகம், அமெரிக்கா) மற்றும் 2017 ஆம் ஆண்டிற்கான விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் (ஜெர்மனி கோலோன் பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் மற்றும் தமிழ் ஆய்வுக் கழகத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர்) ஆகியோர் இவ்விழாவிற்கு வர இயலாததால் அவர்களுக்கு பிறிதொரு நாளில் விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இவ்விழாவில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, க.கணபதி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் மகேசன் காசிராஜன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர் பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி, இயக்குநர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.