பவானி - துபை டிக்கெட் விவகாரம்! அரசு மறுப்பு
பவானி முதல் துபை வரை பயணிக்க ரூ.10,000 டிக்கெட் வழங்கப்பட்டதாக பகிரப்பட்டு வரும் புகைப்படம் போலியனாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது குறித்து...
ஈரோடு பவானி முதல் துபை வரை பயணிக்க ரூ.10,000 கட்டணத்தில் டிக்கெட் என பரவுவது தவறான தகவல் என தமிழ்நாடு அரசு சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், சேலம் மண்டலத்தின் கீழ் இயக்கப்படும் கோவை - பெங்களூரு வழித்தடப் பேருந்தில், பவானி புறவழிச் சாலையில் இருந்து ஓசூருக்கு ரூ. 150 பேருந்து கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட பயணச்சீட்டில் ரூ. 10,000 என அச்சிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டது.
இந்நிலையில் இணையத்தில் பகிரப்பட்டு வரும் இந்த புகைப்படம் செய்யறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் உருவானது என தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இது தொடர்பாக தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
''ஈரோடு பவானி பைபாஸ் முதல் துபை வரை செல்ல அரசு போக்குவரத்து கழகப் பேருந்தில் ரூ.10,000 கட்டணத்தில் டிக்கெட் வழங்கப்பட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது முற்றிலும் தவறான தகவல்.
இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழகம் (சேலம் கோட்டம்) அளித்துள்ள விளக்கத்தில், "சமூக வலைதளங்களில் பரவும் டிக்கெட் (எண்:27846) ஓசூர் புறநகர் கிளைக்கு உட்பட்ட ரூட் எண் 457F-ல் 06-06-2026 அன்று பவானி பைபாஸில் இருந்து கோயம்புத்தூர் வரை ரூ.100-க்கு வழங்கப்பட்டது.
பவானியிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்தின் பயணச்சீட்டை போலியாகத் திருத்தி, அதிலிருந்த ‘பவானி – கோயம்புத்தூர்’ என்ற பயண விவரத்தை ‘பவானி – துபாய்’ எனவும், ரூ.100 கட்டணத்தை ரூ.10,000 எனவும் மாற்றியமைத்து தொழில்நுட்ப முறையில் போலியாக்கம் செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.