கோவை சிறுமி பாலியல் கொலை: தாய்க்குத் தெரியாமல் உடல் எரிக்கப்பட்டதா?
கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தனக்குத் தெரியாமல் உடல் எரிக்கப்பட்டதாக அவரது தாய் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தனக்குத் தெரியாமல் உடல் எரிக்கப்பட்டதாக அவரது தாய் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை சூலூரில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் அவரது சொந்த கிராமத்தில் சனிக்கிழமை (மே 23) தகனம் செய்யப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இருவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், சிறுமியின் உடலை தனக்குத் தெரியாமல் எரித்ததாக அவரது தாய் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, இன்று அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், “என்னுடைய பெண் இறந்து உடற்கூராய்வு முடிந்து என் கண்ணில் அவளைக் காட்டவே இல்லை. எனக்கே தெரியாமல் மருத்துவமனையில் பின்வாசல் வழியாக என் மகளை எடுத்துச் சென்றுள்ளனர். என் கணவருக்கு போன் செய்து நான் வந்துகொண்டிருக்கிறேன் எனக் கூறினேன். ஆனால், அவரது போன் பின்னர் அணைக்கப்பட்டது. நான் கோவையிலிருந்து சேலம் செல்வதற்குள் என் சம்மதமின்றி உடலை எரித்து விட்டனர்.
Advertisement
Advertisement
என் குழந்தையின் உடலை மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டுமென்றால் கூட இப்போது எங்களிடம் அவளது உடல் இல்லை. வேறு யாராவது குற்றம் செய்திருந்தால் எதை வைத்து நாங்கள் அதனைக் கண்டுபிடிப்பது.
இதில் என் கணவர் மீதும், என் கணவர் உடனிருந்த உறவினர்கள் மீதும் நான் குற்றம் சொல்வேன். என் கணவரிடம் அனைவரும் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை. நான் கையெழுத்து போட மாட்டேன் என்று கூறியவுடன் அவர் கையெழுத்தை மட்டுமே வைத்து எனக்கே தெரியாமல் குழந்தையை எடுத்துச் சென்றுள்ளனர்.
எனக்கு நீதி கிடைக்க வேண்டும். முதல்வர் எங்களிடம் பேச வேண்டும் என்று நான் கையெழுத்துப் போடவில்லை. ஆனால், கடைசி வரை நான் கேட்டது நடக்கவில்லை. இதனால், என் கணவரை தனியே அழைத்து உடலைப் பெற கையெழுத்து வாங்கியுள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.