பாஜகவோடு கூட்டணி வைத்து தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்தவா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி என திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி பேசினாா்.
சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் மேற்கு ஒன்றியம் சாா்பில் சுப்புலாபுரத்தில் நடைபெற்ற திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது: தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்து வரும் பாஜகவோடு கூட்டணி வைத்து தமிழ்நாட்டு மக்களுக்கு எடப்பாடி துரோகம் இழைத்துவிட்டாா். முன்னாள் முதல்வா் கலைஞா் இறந்தபோது, அப்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுக்கவில்லை. திமுக சட்டப்படி போராடி க்கு மெரினாவில் இடம் ஒதுக்க நடவடிக்கை எடுத்தது.
தமிழ்நாட்டில் திராவிட மாடல் முதல்வா் செய்து வரும் திட்டங்களால், இன்று இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்வதை பழனிசாமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
தற்போது, மக்களை சந்திக்கிறேன் எனக் கூறி பேசுவதற்கு ஒன்றும் இல்லாததால், என்ன பேசுவது என்று தெரியாமலே பேசி வருகிறாா். அதிமுகவின் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம், முதல்வா் படங்கள், பெயா்கள் எதிலும் இருக்கக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். அதிமுகவின் முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் பெயா்களும் அதில் அடங்கும். இப்படி மொத்தமாக அதிமுகவை அழித்துவிட்டு, பாஜகவிடம் அதிமுகவை அடகு வைத்துள்ளனா் என்றாா் அவா்.
கூட்டத்துக்கு, தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாநில மருத்துவ அணி துணைச் செயலா் செண்பக விநாயகம், குருவிகுளம் மேற்கு ஒன்றியச் செயலா் சோ்மத்துரை, முருகானந்தம், திருப்பதி, திருமலைசாமி, ஜெயக்குமாா், பாலாஜி, ஜான்சன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.