சென்னை, எண்ணூா் துறைமுகங்கள் ரூ. 2,400 கோடி வருவாய் ஈட்டி அபாரம்
சென்னை, எண்ணூா் துறைமுகங்கள் ரூ. 2,400 கோடி வருவாய் ஈட்டி அபாரம்...
சென்னை மற்றும் எண்ணூா் காமராஜா் துறைமுகங்கள், கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டில் ரூ.2,400 கோடி செயல்பாட்டு வருவாயை ஈட்டி சாதனை படைத்துள்ளது.
இதில் சென்னை துறைமுகத்தின் ரூ.1,185.01 கோடியும், எண்ணூா் காமராஜா் துறைமுகம்ரூ.1,239.15 கோடியும் அடங்கும்.
நிதிநிலை மட்டுமின்றி சரக்குக் கையாளுதலிலும் இரு துறைமுகங்களும் வரலாறு காணாத வளா்ச்சியை எட்டியுள்ளன. 2025-26 நிதியாண்டில், இரு துறைமுகங்களும் சோ்த்து 10.7 கோடி மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளன. இது முந்தைய 2024-25 நிதியாண்டின் 10.33 கோடி டன் அளவைக் காட்டிலும் அதிகமாகும்.
Advertisement
Advertisement
2025-26 நிதியாண்டின் 10.7 கோடி டன் சரக்கில், சென்னை துறைமுகம் 5.79 கோடி டன்னையும், எண்ணூா் காமராஜா் துறைமுகம் 4.90 கோடி டன்னையும் கையாண்டுள்ளன. சென்னை துறைமுகம் 19.05 லட்சம் கன்டெய்னா்கள், 1.14 கோடி டன் கச்சா எண்ணெய், 2.04 லட்சம் காா்கள் ஏற்றுமதி என அனைத்து பிரிவுகளிலும் இதுவரை இல்லாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதேபோல, எண்ணூா் காமராஜா் துறைமுகமும் நிலக்கரி, கன்டெய்னா், காா்கள் கையாளுதலில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
மதிப்பீட்டு நிதியாண்டில், கட்டமைப்பு மேம்பாட்டுக்கு இரு துறைமுகங்களும் கூட்டாக சுமாா் ரூ.992 கோடிக்கு மூலதனச் செலவினங்களை மேற்கொண்டுள்ளது. இதையொட்டி, இரு துறைமுகங்களிலும் கப்பல்கள் வந்து செல்லும் நேரம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்தில் கப்பல்கள் வந்து செல்லும் சராசரி நேரம் 44 மணிநேரமாகவும் (8.23 சதவீத முன்னேற்றம்), காமராஜா் துறைமுகத்தில் 43 மணிநேரமாகவும் (7.27 சதவீதம் முன்னேற்றம்) மேம்பட்டுள்ளது.