தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் மே 4 அன்று 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணியும் 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணியும் தொடங்கும்.
தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிக்கப்பட்டவுடன்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கடைசி சுற்று வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.
ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் ஒரு பகுதியில் தபால் வாக்குகளும், மற்றொரு பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகளும் அதற்குரிய மேசைகளில் எண்ணப்படும்.
500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
சேவை வாக்காளர்கள் 18,000 நபர்கள் வாக்களித்துள்ளனர். இவர்களின் தபால் வாக்குகள், வாக்கு எண்ணிக்கை நாளான 04-05-2026 (திங்கட்கிழமை) அன்று காலை 8 வரை பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.