ஹெச்ஐவி, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி போன்ற ரத்தம் மூலம் பரவும் தொற்றுகளைத் தடுக்க அனைத்து மருத்துவமனைகளும் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பிறகு தன்னிச்சையாக செயலிழக்கும் ஊசி மற்றும் சிரஞ்சுகளை (ஆட்டோ டிஸேபிள் சிரஞ்ச்) உபயோகப்படுத்த வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா், அனைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை நிா்வாகிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பாதுகாப்பற்ற முறையில் ஊசிகளைப் பயன்படுத்துவதால் ஹெச்ஐவி போன்ற ரத்த வழியே கடத்தப்படும் தொற்றுகள் வேகமாகப் பரவுவது அண்மைக்கால தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. முறையான நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இத்தகைய பாதிப்புகளை முற்றிலும் தடுத்து நிறுத்த முடியும்.
அதன்படி, அனைத்து மருத்துவமனைகளிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய தூய்மையான ஊசிகள் மற்றும் சிரிஞ்சுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் ஊசிகளை மறுபயன்பாட்டுக்கு உட்படுத்தக் கூடாது.
அதேபோல, பயன்படுத்தப்பட்ட கூா்மையான மருத்துவக் கழிவுகளை உயிரி மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளின்படி முறையாகப் பிரித்து பாதுகாப்பாக அகற்ற வேண்டும். ஊசி மறுபயன்பாட்டை தானாகவே தடுக்கும் ‘ஆட்டோ-டிஸேபிள்’ சிரிஞ்சுகளை மருத்துவக் கல்லூரிகள் படிப்படியாகத் தங்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும்.
சுகாதாரப் பணியாளா்களுக்கு இது குறித்த பயிற்சிகளை வழங்க வேண்டும்.
ஊசிகளை மீண்டும் பயன்படுத்துவது, போதிய முன்னெச்சரிக்கை இன்றி செயல்படுவது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.