அமெரிக்காவில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த எம்.பி.க்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபர், போலீஸாருடன் ஏற்பட்ட மோதலில் பின்னர் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கு பெறும் அடிப்பந்தாட்ட (பேஸ்பால்) விளையாட்டுக்கான பயிற்சியில் வர்ஜீனியா மாகாணம், அலெக்ஸாண்டிரியா நகரிலுள்ள மைதானத்தில் எம்.பி.க்கள் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, இயந்திரத் துப்பாக்கியுடன் அந்த இடத்துக்கு வந்த ஜேம்ஸ் தாமஸ் ஹாட்கின்ஸன் (66) என்ற நபர் எம்.பி.க்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் பிரதிநிதிகள் சபை குடியரசுக் கட்சி கொறடா ஸ்டீவ் ஸ்கேலைஸ் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் திருப்பிச் சுட்டதில் ஜேம்ஸ் தாமஸ் காயமடைந்தார்.
இந்த நிலையில், துப்பாக்கிச் சண்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜேம்ஸ் தாமஸ் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர். எனினும், அவர் துப்பாக்கியால் சுட்டதற்கான காரணம் எதையும் அவர்கள் தெரிவிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, சம்பவத்தில் ஈடுபட்ட ஜேம்ஸ் தாமஸ், கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பிலான வேட்பாளர் போட்டியில் பங்கு பெற்ற பெர்னி சாண்டர்ஸுக்கு ஆதரவான பிரசாரக் குழுவில் இடம் பெற்றிருந்தவர் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.