சீனாவில் மழலையர் பள்ளி வாயிலில் வியாழக்கிழமை நேரிட்ட சக்தி வாய்ந்த வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 66 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அந்த நாட்டு அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹூவா தெரிவித்ததாவது: ஜியாங்ஸு மாகாணம், ஃபெங்ஸியான் நகரிலுள்ள மழலையர் பள்ளி புதன்கிழமை மதியம் 4.50 மணிக்கு குழந்தைகள் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, பள்ளி வாயில் அருகே சக்தி வாய்ந்த வெடி விபத்து ஏற்பட்டது என அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
வெடி விபத்தில், சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்ததாகவும், மேலும் ஐந்து பேர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் ஃபெங்ஸியான் நகர நிர்வாகம் தெரிவித்தது. இந்தச் சம்பவத்தில் பள்ளிக் குழந்தைகள் எவரேனும் காயமடைந்தனரா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
மேலும், இந்தச் சம்பவம் வெடி விபத்தா, அல்லது குண்டு வெடிப்பா என்பது குறித்தும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், அந்தப் பகுதியில் உள்ள உணவகத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்து இந்த விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வாரங்களில் சீனாவில் பள்ளிக் குழந்தைகள் சந்திக்கும் இரண்டாவது பெரிய விபத்து இதுவாகும். அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் பள்ளிக் குழந்தைகளுடன் கடந்த மாதம் 6-ஆம் தேதி சென்று கொண்டிருந்த பேருந்து சுரங்கப் பாதை வழியாக சென்றபோது தீப்பிடித்ததில் அதிலிருந்த 11 குழந்தைகளும், ஆசிரியர் மற்றும் பேருந்து ஓட்டுநரும் உயிரிழந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.