குருப்பெயர்ச்சி பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

DIN

மேஷம்

முக்கியமான விஷயங்களில் நிதானமாக முடிவெடுத்து வெற்றி பெறுவீர்கள். செய்தொழிலில் நிரந்தர வளர்ச்சி அடைவதற்கான அடித்தளத்தை அமைத்துக்கொள்வீர்கள். குடும்பத்தில் ஒரு நியதிக்கு உட்பட்டு சிறப்பாக சிந்திப்பீர்கள். ஆர்வக் கோளாறைத் தவிர்த்து நடக்கக் கூடியவை பற்றி நேர்வழியில் சிந்தித்துச் செயல்படுவீர்கள்.

அஸ்வினி: தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய பணபாக்கிகள் வந்து சேரும்.

பரணி: சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும்.

கார்த்திகை - 1: புதிய வாகனம் யோகம் வந்துசேரும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம்.

பரிகாரம்: வெள்ளிதோறும் அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று வாருங்கள். அவளுக்கு மஞ்ச வஸ்திரம் கொடுத்து அணிவியுங்கள்.

ரிஷபம்

பொருளாதாரத்தில் சிறப்பான அபிவிருத்திகள் உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்தவர்கள் அவற்றை நிறைவேற்றி நற்பெயர் வாங்குவார்கள். மற்றவர்களை உங்களின் வசீகரமான பேச்சினால் கவர்வீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு உதவுவீர்கள்.

உங்களின் மனோ தைரியம் அதிகரிக்கும். போட்டி பொறாமைகளால் பாதிப்பு வராமல் காக்கப்படுவீர்கள்

கார்த்திகை - 2, 3, 4: செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது.

ரோகிணி: வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும்.

மிருகசீரிஷம் - 1, 2: வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும்.

பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயங்களுக்குச் செல்லுங்கள், முடிந்தவர்கள் திவ்ய தேசங்களுக்கும் செல்லலாம். செல்வங்கள் குவியும்.

மிதுனம்

வருமானம் படிப்படியாக உயரும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். வெற்றிகள் குவியும். தோல்வியடையும் என்று நினைத்திருந்த காரியங்கள் வெற்றி பெறும். உற்றார் உறவினர்கள், மற்றும் நண்பர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். உடல் ஆரோக்யம் பலப்படும். புதிய மாற்றம் ஏற்படும்.

மிருகசீரிஷம் - 3, 4: வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வியாபாரிகளிக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

திருவாதிரை: பொதுவான விஷயங்களில் தலையிடுவோருக்கு உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள். பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும்.

புனர்பூசம் - 1, 2, 3: பணத்தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி.

பரிகாரம்: முடிந்தால் திருவண்ணாமலை அல்லது பர்வதமலையை பௌர்ணமியன்று வலம் வரவும்.

கடகம்

உங்கள் காரியங்களை பெரிய அலைச்சல் இல்லாமல் சிறிது தாமதத்துடன் முடித்துவிடுவீர்கள். பொருளாதாரம் சீராக இருந்தாலும் சில அனாவசிய செலவுகளை செய்ய நேரிடும்.

நெடுநாள்களாக இழுத்துக்கொண்டிருந்த வழக்கு விவகாரங்கள் முடிவுக்கு வரும். உங்கள் எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேறும்.

புனர்பூசம் - 4: நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. மாணவர்களுக்கு கேளிக்கையில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது தனிக்கவனம் செலுத்துவது நல்லது.

பூசம்: வெற்றிகளைக் குவித்து வாழ்வில் வசந்தம் வீசம். குடும்பத்தை சாராத ஒருவரால் தொழிலில் சிரமம் ஏற்பட்டு பின் மறையும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள்.

ஆயில்யம்: சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள். எனினும் பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.

சிம்மம்

வாழ்க்கையில் உயர்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். செய்தொழிலில் வருமானம் பல மடங்கு உயரும். மாற்றுக் கருத்துடையோரிடமும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள்.

குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு தடை நீங்கி திருமணம் நடக்கும். குறைந்த முதலீட்டில் புதிய தொழில்களைத் தொடங்குவீர்கள்.

மகம்: கட்டடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும்.

பூரம்: குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும். சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும். விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள்.

உத்திரம் - 1: புதிய வீட்டிற்கு செல்வது பற்றி முடிவெடுப்பீர்கள். பிள்ளைகள் உயர்கல்வி செல்வதற்குண்டான வேலைகளை ஆரம்பிப்பது நல்லது.

பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று தேங்காய் நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.

கன்னி

செல்வத்துடன் செல்வாக்கும் உயரும். செய்யும் தொழிலில் மேன்மையும், பண வரவும் உண்டாகும். பெற்றோர் வழியில் ஏற்பட்ட உடல் உபாதைகள் மறையும். கடன் தொல்லை, மறைமுக எதிர்ப்புகள் என்று எதுவும் ஏற்படாது.

புதிராக இருந்த உறவினர்கள் நல்லபடியாகப் பழகுவார்கள். எல்லோருக்கும் நல்லவர் என்று பெயரெடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும்.

உத்திரம் - 2, 3, 4: வேலை மாற்றம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனுகூலமாகும். ஊதிய உயர்வுடன் கூடிய பணி மாற்றம் உண்டு. வெளிநாட்டில் பணிபுரியும் அன்பர்களுக்கு அரச அனுகூலம் உண்டு.

ஹஸ்தம்: வியாபாரிகளுக்கு புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொள்ள சிறப்பான சந்தர்ப்பம் அமையும். சக ஊழியர்களுடன் ஒத்துப் போவீர்கள்.

சித்திரை - 1, 2: பெரிய கடன்களிலிருந்து விடுபடுவீர்கள். உற்பத்தி சார்ந்த தொழிற்துறையாளர்களுக்கு தொய்வு இன்றி தொழில் நடைபெறும்.

பரிகாரம்: வெள்ளிதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று ஸ்ரீகருடனை வணங்கி வரவும்.

துலாம்

இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நோய் உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். முகத்திலும் உடலிலும் புதிய பொலிவு உண்டாகும். சமூகத்தில் உங்கள் புகழும் அந்தஸ்தும் உயரும். வருமானம் படிப்படியாக அதிகரிக்கும்.

சித்திரை - 3, 4: வாகனங்கள், மற்றும் இயந்திரங்களை பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ஸ்வாதி: சிறிது முயற்சி செய்வதன் மூலம் சிறந்த வாய்ப்புகள் கைகூடும். மேலும் உங்கள் கௌரவம் அதிகரிக்கும்.

விசாகம் - 1, 2, 3: புத்துணர்ச்சியுடன் எதையும் எதிர் கொள்வீர். நல்ல உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் இருக்கும். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்னைகளையும் மிகச் சாதுர்யமாக கையாளுவீர்கள்.

பரிகாரம்: செவ்வாய்தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று வலம் வந்து வணங்கி வரவும். நல்லெண்ணெய் விளக்கு ஏற்றலாம்.

விருச்சிகம்

வருமானம் ஓரளவுக்கு திருப்தியாக அமையும். பழைய கடன்களுக்கு வட்டிகளைச் செலுத்துவீர்கள். பெரிய கடன்கள் ஏதும் ஏற்படாது. செய்தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்ய நேரிடும். பெற்றோர் வழியில் சிறிது மருத்துவச் செலவுகளைச் சந்திக்கலாம்.

விசாகம்: உங்களது யோசனைகளை மற்றவர்கள் கேட்டும் அனுசரித்தும் செல்வார்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். எதையும் ஆலோசனை செய்து முடிவெடுங்கள்.

அனுஷம்: தெய்வ நம்பிக்கைகளிலும் சடங்குகள் சமிபிரதாயங்களில் நாட்டம் அதிகரிக்கும். உங்களின் செயல்பாட்டினால் உங்கள் குடும்பத்திற்கு நன்மை ஏற்படும்.

கேட்டை: நிலம், வீடு, மனை ஆகியவற்றில் இருந்த சிக்கல்கள் விலகி நன்மையுண்டாகும். குடியிருக்கும் வீட்டினை மாற்றவும் சிலருக்கு வாய்ப்புண்டு. பணவரவில் ஓட்டம் இருக்கும்.

பரிகாரம்: வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று ஸ்ரீகுருபகவானை வணங்கி வரவும். தினமும் முன்னோர்களை வணங்கவும்.

தனுசு

உங்களின் வாழ்க்கை வசதிகள் உயரும். சிலர் வசதியான வீடுகளுக்கு மாறுவார்கள். திருமணம் தடைப்பட்டவர்களுக்குத் திருமணம் நடந்தேறும். குழந்தைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். நடக்காமல் தள்ளி வைத்திருந்த விஷயங்கள் சிறப்பாக நடந்தேறும்.

மூலம்: சுபகாரிய விஷயங்கள் தொய்வு இல்லாமல் நடக்கும். வேலை இழந்தவர்கள் மீண்டும் பணியில் சேர பொன்னான காலம் வாய்க்கும்.

பூராடம்: மேலிடத்தில் உள்ள அதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்னைகளை நிதானமான அணுகுமுறையுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

உத்திராடம் - 1: தொழில்துறையாளர்களுக்கு நன்றாக இருக்கும். ஊழியர்கள் அமைதியாகப் போவார்கள். வங்கி பணப்பரிமாற்றம் தங்குதடையின்றி நடைபெறும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீ பைரவரை வணங்கி வரவும். முடிந்தால் மிளகு விளக்குப் போடவும்.

மகரம்

பொருளாதாரம் சீராக இருந்தாலும் முக்கிய செலவுகளுக்கு சிரமப்படுவீர்கள். வெளியில் கொடுத்திருந்த பணம் மீண்டும் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அதனால் அனைத்து விஷயங்களிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள்.

நண்பர்கள் உங்களைப் புரிந்துகொள்ளாமல் கோபப்படுவார்கள். குடும்பத்தில் சிறு சஞ்சலங்களும் குழப்பங்களும் ஏற்படும்.

உத்திராடம் - 2, 3, 4: கலைத்துறையினருக்கு நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகளும் பெருகிடவும் வாய்ப்பான நாளிது. சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும்.

திருவோணம்: தடைபட்டிருந்த அனைத்து காரியங்களும் அடுத்தடுத்து நடைபெறப் போகிறது. வெள்ளை உள்ளத்துடன் உலவும் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும்.

அவிட்டம் - 1, 2: சுற்றியிருக்கும் சோம்பேறிகளிடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிரிகளின் தொல்லைகள் குறையும்.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.

கும்பம்

உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிக் கொடி நாட்டுவீர்கள். எதிர்பார்த்த புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். பிள்ளைகளின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். இல்லத்தில் திருமணம், புத்திர பாக்கியம் ஆகிய சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள்.

அவிட்டம் - 3, 4: உங்கள் பக்கமுள்ள நியாயம் ஓங்கும். பிள்ளைகள் வழியில் மட்டற்ற மகிழ்ச்சிகள் வந்து சேரும். திருமண பாக்கியம் கைகூடி வரும்.

சதயம்: நெடுங்காலமாக சந்தான பாக்கியம் கிட்டாதவர்களுக்கு வரப்பிரசாதம் கிடைக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துப் போவார்கள். தந்தையாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.

பூரட்டாதி 1, 2, 3: குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வருங்கால முன்னேற்றத்தைக் கருதி சில முயற்சிகளை எடுப்பீர்கள். அந்த முயற்சிகள் யாவும் வெற்றிகளைத் தரும்.

பரிகாரம்: வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று நவகிரகங்களை வலம் வந்து வணங்கி வரவும்.

மீனம்

மனக் குழப்பங்களிலிருந்து விடுபட்டு நேரான வகையில் சிந்திப்பீர்கள். அரசாங்கத்தில் முக்கியமானவர்களின் ஆதரவு கிடைக்கும். அனைவரிடமும் சுமுகமான உறவு தொடரும். சகோதர, சகோதரிகள் பகைமை மறைந்து நட்பு பாராட்டுவார்கள். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும்.

பூரட்டாதி - 4: சகோதரத்தின் வெளிநாடு பயணம் இனிதே நடைபெறும். சுயசார்பும் தன்னிறைவும் பெறுவீர்கள். தைரியம் பளிச்சிடும்.

உத்திரட்டாதி: புதிய வழக்குகளை சந்திக்க நேரிடலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை நீங்கும். உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு மறையும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரேவதி: குடும்பத்தில் சிறு சிறு சிக்கல்கள் வந்து வந்து போகும். சிறைத்துறையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பயணம் தொடர்பான தொழில்களில் லாபம் கிடைக்கும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறூம் அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று வரவும். முடிந்தவர்கள் அருகிலிருக்கும் அறுபடை ஸ்தலங்களுக்குச் சென்று வாருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு..