தன் மக்களை நம்பிய முதல் மனிதர் மகாத்மா காந்தி. மக்கள் மனதில் ஜனநாயக உணர்வு உறங்கிக் கிடைப்பதை உணர்ந்தவர் அவர். அந்த உணர்வுக்கு நீரூற்றி உரம் போட்டு வளரச் செய்துவிட்டு மறைந்து போனார் மகாத்மா என்ற பெயருடன்.
1964 மே மாதம் பண்டித நேரு மறைந்தார்; அரியணையில் அமர்ந்தார் சாஸ்திரி; "ஜெய் ஜவான், ஜெய் கிசான்' என்பது அவரது முழக்கம் மட்டுமல்ல, ஏர்முனையிலும், போர்முனையிலும் வெற்றிக் கொடி நாட்டினார் ! வியந்து பார்த்தது உலகம்!
அடுத்து ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தார் இந்திரா காந்தி. வங்கிகள் தேசிய மயம், மன்னர் மானிய ஒழிப்பு, 20 அம்சத் திட்டம் என்று பல புதிய திட்டங்களைச் செயல்படுத்தினார்.
யாரும் எதிர்பாராத வகையில் 21-03-1977 அவரே அவசரநிலைப் பிரகடனத்தை ரத்து செய்தார்; பொதுத் தேர்தலை அறிவித்தார். இந்திரா காந்தி தேர்தலில் தோற்றார். மொரார்ஜி தேசாய் பிரதமரானார். அவரைத் தொடர்ந்து சரண்சிங் சில காலம் பிரதமரானார். 1980 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் ஆனார். ஜனநாயக ஆட்சி முறை உயிர்த்தெழுந்தது!
1984-இல் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பின்பு, ராஜீவ் காந்தி தொடங்கி மன்மோகன் சிங் காலம் வரை (2014 ஏப்ரல் மாதம் வரை) சுமார் 30 ஆண்டுகள்- 8 தலைவர்கள் பிரதமர் பதவி வகித்தனர். கட்சியும் ஆட்சியும் மாறின; ஆனால், ஜனநாயகம் தடம் புரளவில்லை!
குஜராத் மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடி 2014 மே மாதம் பிரதமராகப் பதவியேற்றார். ஆற்றல் மிகுந்த அவர், பல்வேறு திட்டங்கள் தீட்டினார்; தீவிரமாகச் செயல்படுத்தினார். அண்டை நாடுகள், வெளிநாடுகளுடன் உறவை வளர்த்தார்.