கிராமியம் என்பது தமிழ்நாட்டின் அடையாளம் மட்டுமல்ல; இந்திய அடையாளமும் கூட. அதனால்தான், "16 வயதினிலே' திரைப்படம் "படகரெல்ல வயசு' என்று தெலுங்கிலும் "சால்வா சாவன்' என்று ஹிந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு பெரும் வரவேற்பினைப் பெற்றது.
புராணங்கள், இதிகாசங்கள், தெய்விகத் திருவிளையாடல்கள் என்று இருந்த தமிழ்த் திரையுலகம் சுதந்திரப் போராட்டம், நாட்டு விடுதலை எனப் பயணித்து சமூகம் மற்றும் குடும்பங்களைப் பேசுபொருளாக்கிக் கொண்டது.
திரை நடிகர்களின் தேர்விலும் பாரதிராஜா ஒரு புதிய போக்கை உருவாக்கினார். அழகிய தோற்றம், பெரும் உடற்கட்டு, குரல் வளம், நடனம் சண்டைப் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமின்றி எளிய தோற்றமும் இயல்பான உடல்மொழியும் கொண்டவர்கள் கதை நாயகர்களாக அறிமுகப்படுத்தப்பட்டனர்.
நாயகர்கள் மட்டுமின்றி ராதிகா, ராதா, ரேகா, ரேவதி, ரஞ்சிதா என்று நாயகிகளும் அறிமுகம் செய்யப்பட்டனர். கதையின் நாயகர் தேர்விலும் பாரதிராஜா ஏற்படுத்திய மாற்றங்கள் பெருமைக்குரியவையே.
புதுமுகங்களை மட்டுமின்றி புகழ்பெற்ற நடிகர்களையும் தன் திரைப்படங்களில் மாறுபட்ட வேடங்களிலும் புதிய நோக்கிலும் வெளிப்படுத்தியவர் பாரதிராஜா.