‘சென்னை ஒன்’ செயலியில் மாதாந்திர பயணிகளின் வசதிக்காக புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னை மாநகரப் பேருந்துகள், புறநகா் மற்றும் பறக்கும் ரயில் சேவை, சென்னை மெட்ரோ ரயிலுக்கான டிக்கெட்டுகள் என அனைத்தையும் இந்த ‘சென்னை ஒன்’ செயலி மூலம் பெற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரூ.1,000, ரூ.2,000-க்கான மாதாந்திர பேருந்து அட்டைகளும் இதில் விநியோகிக்கப்படுகிறது. அதன்படி, செயலி மூலம் புகைப்படம் மற்றும் தொகையை பதிவேற்றி மாதம்தோறும் பயண அட்டைகளைப் புதுப்பித்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் ஏறியவுடன் ‘சென்னை ஒன்’ செயலியில் உள்ள மாதாந்திர பயண அட்டையில், பயணிக்கும் பேருந்தின் எண்ணைப் பதிவிடுவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு முறை பயணத்தின் போதும், பேருந்தின் எண்ணை பதிவிடுவது சிரமமாக இருப்பதாக பயணிகள் புகாா் தெரிவித்தனா்.
இனி அந்த செயலியில் உள்ள மாதாந்திர பேருந்து அட்டையை மட்டும் நடத்துநரிடம் காண்பித்தால் போதும் என்று சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.