நான் முக்கிய காரியம் ஒன்றை எண்ணியுள்ளேன். அது நடக்குமா? குடும்ப நிலை, வேலை எப்படி இருக்கும்? - வாசகர், பொன்மலை
உங்களுக்கு மேஷ லக்னம், சிம்ம ராசி.லக்னம் மற்றும் எட்டாம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய்பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானாதிபதியான சூரியபகவான் லக்னத்தில் உச்சம் பெற்று பாக்கியாதிபதியான குருபகவானுடனும் புதபகவானுடனும் இணைந்திருக்கிறார். இதனால் சிறப்பான புதஆதித்ய யோகம் , சிவராஜ யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. குருபகவானின் ஐந்தாம் பார்வை பூர்வபுண்ணிய ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சந்திரபகவானின் மீதும் படிகிறது. இதனால் குருசந்திர யோகம் உண்டாகிறது. குருபகவான் ஏழு மற்றும் ஒன்பதாம் வீடுகளைப் பார்வை செய்கிறார். உங்களுக்கு தற்சமயம் குருபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். நீண்ட நாள்களாக எண்ணிய காரியமும் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் ஈடேறும். மற்றபடி பெயர் மாற்றம் தேவையில்லை. பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.