திருமணத் தடைகள் நீங்கும்
எனக்கு நல்ல வேலை எப்பொழுது கிடைக்கும்? எனது திருமணமும் பலரால் தடுக்கப்பட்டு வருகிறது. எனது குடும்பத்திலும் ஒற்றுமை குறைவாக உள்ளது. எல்லாம் சீரடைய பரிகாரம் கூறுங்கள்.
வாசகர், கோட்டூர்.
உங்களுக்கு கடக லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்னாதிபதி குடும்ப ஸ்தானத்தில் இருப்பது சிறப்பென்றாலும், கேது பகவானுடன் இருப்பது சிறு குறை. பூர்வ புண்ணியாதிபதி, தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய் பகவான், ஆறு மற்றும் ஒன்பதாம் வீட்டிற்கதிபதியான குரு பகவானுடன் (தர்ம கர்மாதிபதி யோகம்) லாப ஸ்தானத்தில் இணைந்து பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். குடும்பாதிபதியான சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கும் சுக்கிர பகவானுடன் இணைந்திருக்கிறார். குரு பகவானின் ஐந்தாம் பார்வை தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டின் மீதும் படிகிறது. தற்சமயம் எட்டாம் வீட்டில் சுய சாரத்தில் அமர்ந்திருக்கும் ராகு மஹா தசையில், ஆறாம் வீட்டில் அமர்ந்திருக்கும் சனி பகவானின் புக்தி நடக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் தகுதிக்கேற்ற நல்ல வருமானம் வரும் வேலைக்கு மாறிவிடுவீர்கள். திருமணத்திற்குத் தடைகள் நீங்கிவிடும். இந்த காலக் கட்டத்தில், படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். குடும்பத்திலும் ஒற்றுமை உண்டாகும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும், முருகப் பெருமானையும் வழிபட்டு வரவும்.