"விரைவில் மறுமணம்'
என் மகனுக்கு மறுமணம் செய்ய முயற்சிக்கிறோம். அவருடைய மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். ஏழு வயதில் பேரன் இருக்கிறார். பேரனின்வாழ்க்கை எவ்வாறு அமையும்? மறுமணத்திற்குப் பிறகு என் மகனின் எதிர்காலம் நன்றாக இருக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
- கிருஷ்ணவேணி, வியாசர்பாடி.
உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், மகர நவாம்சம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாதம். லக்னம் மற்றும் ஆறாமதிபதி சுக்கிர பகவான் பன்னிரண்டாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று சுய சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார்.
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் லக்னத்தில் அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார்.
ஒன்பதாம் வீட்டிற்கும், பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் திக்பலம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார்.
தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கதிபதியான சந்திர பகவான் லாப ஸ்தானத்தில் புத பகவானின் சாரத்திலமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கதிபதியான சூரிய பகவான் லக்னத்தில் சுய சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் ராகு பகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார்.
அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். குரு பகவானின் ஐந்தாம் பார்வை தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் கேது பகவானின் மீதும், ஒன்பதாம் பார்வை களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் தர்ம கர்மாதிபதி, ஆயுள் காரகருமான சனி பகவானின் மீதும் படிகிறது.
கேது பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிலமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். ராகு பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார்.
அவருக்கு விபரீத ராஜ யோகம், குரு சந்திர யோகம், சந்திர மங்கள யோகம், குரு மங்கள யோகம், புத ஆதித்ய யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன.
லக்னத்தில் சுகாதிபதி பலம் பெற்றிருப்பதும், லக்னாதிபதி அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் (கட்டில் சுகத்தை குறிக்கும் வீடு) இருப்பதும் சிறப்பாகும். குரு, சந்திர பகவான்கள் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதாலும், குரு பகவானின் பார்வை களத்திர ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் சனி பகவானையும் பார்வை செய்வதாலும் மறுமணம் உண்டு.
தற்சமயம் சூரிய பகவானின் தசையில் ராகு பகவானின் புக்தி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடக்கும். அதற்குள் தகுதியான பெண் நிச்சயமாகி, அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும். ஐந்தாமதிபதி நான்காமதிபதியுடன் (திரிகோணாதிபதி, கேந்திராதிபதி) இணைந்தும், குரு, சந்திர பகவான்களின் பார்வை ஐந்தாம் வீட்டின் மீது படிவதாலும் உங்கள் பேரனின் வாழ்க்கையும் சிறப்பாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்!