உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிஷ நட்சத்திரம். அஷ்டமாதிபதியான சந்திரபகவான் விபரீத ராஜயோகம் பெற்று ஆறாம் வீட்டில் உச்சம் பெற்றிருப்பது சிறப்பு. லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான குருபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் ஆறு மற்றும் பதினொன்றாமதிபதியான சுக்கிரபகவானுடன் தனம், வாக்கு, குடும்பம் மற்றும் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவானுடனும் இணைந்திருக்கிறார். இவர்களின் பார்வை சுக ஸ்தானத்தின் மீதும் படிகிறது. அதோடு குருபகவானின் ஐந்தாம் பார்வை இரண்டாம் வீட்டின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் கேதுபகவானின் மீதும், ஒன்பதாம் பார்வை ஆறாம் வீட்டின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சந்திரபகவானின் மீதும் படிகிறது. இதனால் சிறப்பான குரு சந்திர யோகம் உண்டாகிறது. பூர்வபுண்ணியாதிபதி மற்றும் அயன ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் அயன ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று உச்சம் பெற்றுள்ள சந்திரபகவானைப் பார்வை செய்வதால் முழுமையான சந்திரமங்கள யோகம் உண்டாகிறது. களத்திர, தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் பாக்கியாதிபதியான சூரியபகவானுடன் லாப ஸ்தானத்தில் இணைந்து இருப்பதும் சிறப்பு. தற்சமயம் குருபகவானின் தசை முடிந்து சனிபகவானின் தசை நடக்க உள்ளது. இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் மறுமணம், நிரந்தர குடியுரிமை ஆகியவை நடந்தேறி விடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். புத்திர பாக்கியம் உண்டு. பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.