என் தங்கை மகனுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? அவருக்கு ராகு, கேது, செவ்வாய் தோஷம் உள்ளதாகக் கூறுகிறார்கள். உறவில் அல்லது அந்நியத்தில் பெண் அமையுமா? எந்தக் கோயிலுக்கு போகவேண்டும்? எதிர்காலம் பற்றிக் கூறவும்.
வாசகர், ராசிபுரம்.
உங்கள் சகோதரி மகனுக்கு கடக லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் ராகு பகவானுடன் இணைந்திருக்கிறார்.
கடக லக்னத்திற்கு செவ்வாய் பகவான் எங்கிருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை. ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் உச்சம் பெற்றுள்ள சூரிய பகவானுடன் இணைந்து சிவ ராஜயோகத்தைக் கொடுக்கிறார்.
குருபகவானின் ஐந்தாம் பார்வை தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் கேது பகவானின் மீதும் படிவதால் சர்ப்ப தோஷம் குறைகிறது என்று கூறவேண்டும்.
குரு பகவானின் ஏழாம் பார்வை சுகஸ்தானமான நான்காம் வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவானின் மீதும் படிகிறது. தற்சமயம் பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கும் சுக்கிர பகவானின் தசையில் இறுதிப்பகுதி நடப்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தகுந்த பெண் அமைந்து திருமணம் நடக்கும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.