எனக்கு அரசு வேலை கிடைக்குமா? மேற்படிப்பு படிக்கும் யோகம் உண்டா? திருமணம் எப்போது நடக்கும்?
வாசகி, திருவாரூர்.
உங்களுக்கு மிதுன லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னம், சுகஸ்தனமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் ராகு பகவானுடன் இணைந்திருக்கிறார். பூர்வ புண்ணிய புத்திர புக்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் தைரியஸ்தானமான மூன்றாம் வீட்டில் விபரீத ராஜ யோகம் பெற்று ஆட்சி பெற்றுள்ள தைரியஸ்தானதிபதியுடன் இணைந்திருக்கிறார். சுக்கிர பகவான் நவாம்சத்தில் ஆட்சி பெற்றிருக்கிறார். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் லாபஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் நீச்ச பங்க ராஜயோகம் பெற்று, களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவானுடன் இணைந்திருக்கிறார்.
குருபகவானின் ஐந்தாம் பார்வை தைரிய ஸ்தானத்தின் மீதும், அங்கமர்ந்திருக்கும் சூரிய பகவானின் மீதும் (சிவராஜ யோகம்) சுக்கிர பகவான் மீதும், ஏழாம் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீதும், அங்கமர்ந்திருக்கும் செவ்வாய் பகவானின் மீதும் (குருமங்கள யோகம்) சந்திர பகவானின் மீதும் (கஜகேசரியோகம்) ஒன்பதாம் பார்வையாக களத்திர நட்பு ஸ்தானமான தன் மூலத் திரிகோண வீடான தனுசு ராசியை பார்வை செய்கிறார்.
தற்சமயம் சனி பகவானின் தசையில் சுய புக்தி நடக்கிறது. இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் அரசு சார்ந்த துறைகளிலும், வங்கி, காப்பீடு போன்ற துறைகளிலும் நிரந்தர வேலை கிடைக்கும். தபால் மூலம் மேலாண்மைப் படிப்பைப் படிக்கலாம்.
இன்னும் மூன்றாண்டுகளுக்குப் பிறகு, படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கை கூடும். பிரதி வியாழக்கிழமை குருபகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.