என் மகன் வயது 34. இவருக்கு திருமணம் எப்பொழுது நடக்கும்? மணமகள் எவ்வாறு அமையும்? பரிகாரம் ஏதும் செய்யவேண்டுமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?
-வாசகர், மதுரை.
உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னம், அஷ்டமாதிபதியான செவ்வாய் பகவான் லக்னத்தில் மூலத் திரிகோணம் பெற்று அமர்ந்திருக்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சூரிய பகவான் லக்னத்தில் உச்சம் பெற்று ராகு பகவானுடன் இணைந்திருக்கிறார்கள். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் நீச்ச பங்க ராஜயோகம் பெற்றமர்ந்திருக்கிறார். குரு பகவானின் ஐந்தாம் பார்வை தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தின் மீதும், ஏழாம் பார்வை சுக ஸ்தானமான நான்காம் வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டின் மீதும் படிகிறது. தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் உச்சம் பெற்று, நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள புத பகவானுடனும், சந்திர பகவானுடனும் இணைந்திருக்கிறார். தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். தற்சமயம் சுக்கிர பகவானின் தசை முடியும் தருவாயில் உள்ளதால், அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். மணவாழ்க்கை, எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.