என் மகள் பொறியியல் படிப்பு படித்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக வரன் தேடிக் கொண்டிருக்கிறோம். எப்போது திருமணம் கைகூடும்?
- வாசகர், திருநெல்வேலி
உங்கள் மகளுக்கு சிம்ம லக்னம், சிம்ம ராசி, உத்திரம் நட்சத்திரம். லக்னாதிபதி குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெற்ற குடும்பாதிபதியுடனும் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள சுக்கிரபகவானுடனும் இணைந்திருக்கிறார். பூர்வபுண்ணியாதிபதி மற்றும் அஷ்டமாதிபதியான குருபகவானின் ஐந்தாம் பார்வை அஷ்டம ஸ்தானமான மாங்கல்ய ஸ்தானத்தின் மீதும், ஏழாம் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை அயன ஸ்தானத்தின் மீதும் படிகிறது. ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் களத்திர ஸ்தானத்தில் மூலதிரிகோண ராசியில் பஞ்சமகாபுருஷ யோகங்களில் ஒன்றான சச மகா யோகத்தைப் பெறுகிறார்.
சுக, பாக்கியாதிபதியான செவ்வாய்பகவான் தைரிய ஸ்தானத்தில் ராகுபகவானுடன் இணைந்து இருவரின் பார்வை பாக்கிய ஸ்தானத்தின் மீது படிகிறது. களத்திர ஸ்தானாதிபதியை குருபகவான் பார்வை செய்வதும் சிறப்பு. தற்சமயம் ராகுபகவானின் தசையில் சுய புக்தி நடக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.