எனது மகளுக்கு 29 வயதாகிறது. நாகதோஷம் இருப்பதாக சொன்ன காரணத்தினால் பல்வேறு பரிகாரங்கள் செய்துள்ளோம். எப்போது திருமணம் நடைபெறும்? வேறு பரிகாரம் செய்ய வேண்டுமா?
- வாசகர், கோயம்புத்தூர்
உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் சூரியபகவானுடன் (புதாதித்ய யோகம்) இணைந்திருக்கிறார். பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்ற அஷ்டமாதிபதியான சனிபகவானுடனும் ராகுபகவானுடனும் இணைந்திருக்கிறார்.
களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் உச்சம் பெற்று கேதுபகவானுடன் இணைந்து இருக்கிறார்.
குருபகவானின் ஐந்தாம் பார்வை ஆறாம் வீட்டின் மீதும் ஏழாம் பார்வை அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சுக்கிர, சனி பகவான்களின் மீதும், ஒன்பதாம் பார்வை தொழில் ஸ்தானமான தன் ஆட்சி வீட்டின் மீதும் படிகிறது. ஆறாம் வீட்டிற்கும் லாப ஸ்தானத்திற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து சந்திரபகவானுக்கு கேந்திரம் பெற்றிருப்பதால் சந்திரமங்கள யோகம் உண்டாகிறது.
அதோடு, புதாதித்ய யோகம், தர்மகர்மாதிபதி யோகம் ஆகிய சிறப்பான யோகங்களும் உண்டாகின்றன. தற்சமயம் பலம் பெற்ற ராகுபகவானின் தசையில் சுயபுக்தி நடக்கிறது. இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். சர்ப்பகிரகங்களுக்கு குருபகவானின் சம்பந்தம் ஏற்பட்டுள்ளதால் சர்ப்பசாந்தி அவசியமில்லை. களத்திர ஸ்தானாதிபதிக்கு ஏற்ற சம தோஷம் பார்த்து சேர்த்தாலே போதுமானது. பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.