என் மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? நிரந்தர வேலை எப்போது கிடைக்கும்? தோஷம் ஏதும் உள்ளதா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
- வாசகர், மதுரை
உங்கள் மகளுக்கு சிம்ம லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னாதிபதியான சூரியபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் புதபகவானுடன் இணைந்து புதாதித்ய யோகத்தைப் பெறுகிறார். பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரபகவானுடன் இணைந்து அவர்கள் இருவரின் பார்வையும் தொழில் ஸ்தானத்தின் மீது படிகிறது.
ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் மூலதிரிகோணத்தில் வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்து, லக்னத்தில் உள்ள சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவானால் பார்க்கப்படுகிறார். அயன ஸ்தானாதிபதியான சந்திரபகவான் ருணம் ரோகம் சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்றமர்ந்திருக்கிறாôர். ராகுபகவான் தைரிய ஸ்தானத்திலும் கேதுபகவான் பாக்கிய ஸ்தானத்திலும் அமர்ந்திருக்கிறார்கள். தற்சமயம் ராகுபகவானின் தசையில் சனிபகவானின் புக்தி இன்னும் இரண்டாண்டுகளுக்குள் நடக்கும்.
அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். தனியார் துறையில் சிறப்பான வளர்ச்சியை காண்பார். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.