எங்கள் இரண்டாவது மகன் பொறியியல் படித்து தில்லியில் தனியார் துறையில் பணியாற்றி வருகிறார். அவருக்கு நிரந்தரப் பணி வாய்ப்பு எப்போது அமையும். அவரது ஜாதகத்தில் ராகு கேதுவுக்கு இடையே சனி இருப்பதும், ராசியில் ஐந்து கோள்கள் இருப்பதன் பலனையும் அறிய விரும்புகிறேன். அவருக்கு திருமணம் எப்போது நடைபெறும்? பெண் எவ்வாறு அமையும்?
-ஆர். கார்த்திகேயன், உடுமலை.
உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம் தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம். லக்னாதிபதி சூரிய பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் தனம் வாக்கு குடும்பாதிபதியான புத பகவான் (புத ஆதித்ய யோகம்) சுக, பாக்கியாதிபதியான செவ்வாய் பகவான், அயன ஸ்தானாதிபதியான சந்திர பகவான் மற்றும் ராகு பகவான்களுடன் இணைந்து இருக்கிறார்.
இதனால் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான இரண்டாம் திரிகோண ஸ்தானம் வலுவடைகிறது. பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் லக்னத்தில் அமர்ந்திருக்கிறார்.
குரு பகவானின் ஐந்தாம் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சூரிய பகவானின் மீதும் (சிவராஜ யோகம்) சந்திர பகவானின் மீதும் (குரு சந்திர யோகம்) செவ்வாய் பகவானின் மீதும் (குரு மங்கள யோகம்) புத ராகு பகவான்களின் மீதும் படிகிறது. ஏழாம் பார்வை களத்திர ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை பாக்கிய ஸ்தானத்தின் மீதும் படிகிறது. தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தைப் பார்க்கிறார். ஆறாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார்.
தற்சமயம் ராகு பகவானின் தசையில் சனி பகவானின் புக்தி இன்னும் இரண்டாண்டுகள் வரை நடக்கும். அடுத்த ஆண்டு இறுதிக்குள், படித்த நல்ல வேலையில் உள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். உத்தியோகத்திலும் தெற்கு திசைக்கு மாற்றல் கிடைக்கும். பெற்றோருடன் சேர்ந்து வாழும் வாய்ப்பும் உண்டாகும். சனி பகவான் கேது ராகு பிடியில் இல்லாததால் கால சர்ப்ப தோஷம் இல்லை. ராசி வலுத்திருப்பதும் சிறப்பாகும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்கையை வழிபட்டு வரவும்.