என் மகளுக்கு 31 வயதாகிறது. மருத்துவத்தில் உயர் படிப்பு படித்து சென்னையில் பெரிய மருத்துவமனையில் வேலை பார்க்கிறார். திருமணம் தாமதப்படுகிறது. எப்போது தகுதியான வரன் அமையும்?
-வாசகி, ஆம்பூர்.
உங்கள் மகளுக்கு தனுசு லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம் முதல் பாதம். லக்னம், சுகாதிபதி குரு பகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானத்தில் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்று அமர்ந்து ஐந்தாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் தர்ம கர்மாதிபதிகளான சூரிய பகவானையும் (சிவராஜ யோகம்), புத பகவானையும் பார்வை செய்கிறார்.
ஒன்பதாம் பார்வையாக தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் அமர்ந்திருக்கிறார்.
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் லக்னத்திலமர்ந்து களத்திர நட்பு ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் லாப ஸ்தானத்தில் மூலத் திரிகோணம் பெற்றமர்ந்திருக்கிறார்.
தற்சமயம் சுக்கிர மஹா தசையில் குரு பகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் தகுதியான நல்ல பதவியிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.