எனது தொழிலில் எப்பொழுது முன்னேற்றம் உண்டாகும்... ஆயுள், ஆரோக்கியம் பற்றியும் கூறவும்... பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா..?
-வாசகர், கோவை.
உங்களுக்கு மகர லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். லக்னாதிபதி லக்னத்திலேயே ஆட்சி பெற்றமர்ந்து சசமஹா யோகத்தைப் பெறுகிறார். பூர்வ புண்ணியாதிபதி சுக்கிர பகவான், லாபாதிபதி செவ்வாய் பகவான், கேது பகவான்கள் அயன ஸ்தானத்திலேயே இணைந்திருக்கிறார்கள்.
அயன ஸ்தானாதிபதி குரு பகவான் தைரிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று செவ்வாய் (குரு மங்கள யோகம்) பகவானுக்குக் கேந்திரம் பெற்றிருப்பதால் பொருளாதாரம், ஸ்திர சொத்துகளில் மேன்மை ஆகியவை உண்டாகும்.
குரு பகவானின் ஐந்தாம் பார்வை களத்திர நட்பு ஸ்தானத்தின் மீதும், ஏழாம் பார்வை பாக்கிய ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை லாப ஸ்தானத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் ஆயுள் ஸ்தானாதிபதியான சூரிய (சிவராஜ யோகம்) பகவானின் மீதும், பாக்கியாதிபதியான புத பகவானின் மீதும் படிகிறது.
களத்திர நட்பு ஸ்தானாதிபதி சந்திர பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுய சாரத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். பெளர்ணமி யோகமும் உண்டாகிறது. ஆரோக்கிய ஸ்தானத்தில் ராகு பகவான் அமர்ந்திருப்பதால் அஷ்டலட்சுமி யோகம் உண்டாகிறது. தற்சமயம் சனி பகவானின் தசையில் பிற்பகுதி நடப்பதால் செய்தொழிலில் மேன்மையே உண்டாகும். ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. தீர்க்காயுள் உண்டு. பரிகாரம் எதுவும் தேவையில்லை.