மழலை பாக்கியம் உண்டாகும்
என் மகள் வெளிநாட்டில் வசிக்கிறார். திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் குழந்தை இல்லை. எப்பொழுது மழலை பாக்கியம் உண்டாகும்? பரிகாரம் கூறவும்..!
-வாசகி, சென்னை.
உங்கள் மகளுக்கு கும்ப லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். லக்னம், பன்னிரண்டாம் அதிபதி சனி பகவான் பத்தாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். ஐந்தாம் வீட்டிற்கும், எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான், சுக ஸ்தானத்திற்கும் பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியான யோக காரகரான சுக்கிர பகவான், சந்திர பகவானுடன் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.
களத்திர நட்பு ஸ்தானாதிபதி தன் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் மறைந்திருந்தாலும், குரு பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக களத்திர நட்பு ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக ஒன்பதாம் வீட்டையும், ஒன்பதாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார்.
தற்சமயம் சனி பகவானின் தசையில் சுக்கிர பகவானின் புக்தி நடப்பதால் இன்னும் இரண்டாண்டுக்குள் மழலை பாக்கியம் உண்டாகும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.