எனது பூர்வீக சொத்துகளை விற்று கடன்களை அடைக்க முயற்சி செய்து வருகிறேன். என் முயற்சிகளுக்கு எப்பொழுது பலன் கிடைக்கும்?
-வாசகர், சென்னை.
உங்களுக்கு கும்ப லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். லக்னாதிபதி அயனஸ்தானதிபதி சனி பகவான் ஆயுள் ஸ்தானமான எட்டாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தீர்க்காயுள் உண்டு.
அதோடு எட்டாம் வீட்டிற்கு எட்டாம் வீட்டில் (பாவாத் பாவம்) அதாவது மூன்றாம் வீட்டில் முழுச் சுபரான குரு பகவான் அமர்ந்து, ஐந்தாம் பார்வையாக களத்திர நட்பு ஸ்தானத்தையும், அங்கு ஆட்சி பெற்றமர்ந்திருக்கும் சூரிய (சிவராஜயோகம்) பகவானையும், சுக்கிர பகவானையும், ஏழாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார்.
இதனால் தீர்க்காயுள் (82 வயதுக்கு மேல்) என்று கூற வேண்டும். தைரிய, கர்மாதிபதி செவ்வாய் பகவான் கர்ம ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருப்பதால் எடுத்த காரியங்கள் தடையில்லாமல் வெற்றி பெறும்.
சுக்கிர பகவான் சுய சாரத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்திருப்பதும், சூரிய பகவான் நவாம்சத்தில் உச்சம் பெற்றிருப்பதும் சிறப்பு. தற்சமயம் சுக்கிர பகவானின் தசையில் சந்திர பகவானின் புக்தி நடக்கிறது. செவ்வாய் புக்தியில் நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்கு சொத்துக்களை விற்கலாம். உங்கள் எண்ணங்கள் தடையின்றி நிறைவேறும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வரவும்.