என் பேரனுக்கு செவ்வாய் தோஷம் உள்ளதா? பட்ட மேற்படிப்பை எப்பொழுது முடிப்பார்? வேலை எப்பொழுது கிடைக்கும்? திருமணம் எப்பொழுது நடக்கும்? தேய்பிறை முகூர்த்தத்தில் திருமணம் செய்யலாமா?
-கந்தசாமி, செங்கம்.
உங்கள் பேரனுக்கு கடக லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். லக்னாதிபதி நீச்ச வர்கோத்தமத்தில் இருப்பதால் நீச்ச பங்கராஜ யோகம் பெற்று விடுகிறார்.
பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் அமர்ந்து, தொழில் ஸ்தானத்தையும் பார்வை செய்வது சிம்மாசன யோக மாகும்.
கடக லக்னத்திற்கு செவ்வாய் பகவான் யோக காரகராக ஆவதால் செவ்வாய் தோஷமில்லை. பாக்கியாதிபதியான குரு பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் நீச்ச பங்கராஜ யோகம் (சனி, குரு பகவான்கள் பரிவர்த்தனை) பெற்றமர்ந்து, ஐந்தாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக லக்னத்தையும், ஒன்பதாம் பார்வையாக மூன்றாம் வீட்டையும் பார்வை செய்கிறார்.
அதனால் அவர் இந்த ஆண்டே பட்டமேற்படிப்பை முடித்து விடுவார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு தனியார் துறையில் வேலை கிடைக்கும். 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு திருமண முயற்சிகள் வெற்றி பெறும். சுப முகூர்த்த தினங்கள் வரன், வது இருவருக்கும் சாதகமாக இருக்கும் பட்சத்தில் தேய்பிறை சுப முகூர்த்தங்களைத் தவிர்க்க வேண்டாம். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமியை வழிபட்டு வரவும்.