என் மகளுக்கு செவ்வாய்த் தோஷம் உண்டா? அவருக்குத் திருமணம் எப்போது நடைபெறும்?
-வாசகர், துறையூர்.
உங்களது மகளுக்கு மிதுன லக்னம், கடக ராசி, புனர்பூச நட்சத்திரம். லக்னாதிபதி, சுகாதிபதி புத பகவான் கேந்திராதிபதி பத்ய தோஷம் நீங்கப் பெற்று, அயன சயன ஸ்தானத்தில் மறைவு பெற்று இருப்பது சிறப்பு.
"மறைந்த புதன் நிறைந்த மதி' என்பது ஜோதிட வழக்கு. பூர்வ புண்ணியாதிபதி அயன ஸ்தானாதிபதி சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்று, பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவிகா யோகத்தைப் பெறுகிறார்.
அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டுக்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டுக்குமதிபதியுமான சனி பகவானின் பாக்கிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று இருப்பதும் சிறப்பு.
தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டுக்கதிபதி சந்திர பகவான் குடும்ப ஸ்தானத்திலேயே ஆட்சி வர்கோத்தமம் பெற்று அமர்ந்திருப்பதால், அங்கு நீச்சம் பெற்றுள்ள செவ்வாய் பகவானுக்கு நீச்ச பங்க ராஜயோகம் உண்டாகிறது. இதனால் செவ்வாய்த் தோஷம் இல்லை.
களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டுக்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டுக்குமதிபதியுமான குரு பகவான் ஆறாம் வீட்டில் கேந்திராதிபதித்ய தோஷம் நீங்கப் பெற்று, ஐந்தாம் பார்வையாகத் தொழில் ஸ்தானத்தையும், அங்கமர்ந்திருக்கும் சுக்கிர பகவானையும், ஏழாம் பார்வையாக பன்னிரெண்டாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் லக்னாதிபதியான புத பகவானையும், ஒன்பதாம் பார்வையாக தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் செவ்வாய் (குரு மங்கள யோகம்) பகவானையும் பார்வை செய்கிறார்.
தைரிய ஸ்தானதிபதி சூரிய பகவான் லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்று, கேது பகவானுடன் இணைந்திருக்கிறார். தற்சமயம் புத பகவானின் தசையில் சந்திர புத்தி நடக்கத் தொடங்க உள்ளதால், இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பின்னர் படித்த சிறப்பான வேலையில், சம அந்தஸ்தில் உள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும்.
பிரதி புதன்கிழமைகளில் ஸ்ரீராமரை வழிபட்டு வரவும்.