என் மகன் பி.இ., படித்துவிட்டு பெயர்பெற்ற மெக்கானிக்கல் கம்பெனியில் வேலை செய்து வந்தார். ஆனால், தற்சமயம் என் கடையில் தான் இருக்கிறார்.
அவருக்கு எப்பொழுது மறுபடியும் நல்ல வேலை கிடைக்கும்? திருமணம் எப்பொழுது நடக்கும்?
வாசகர், சிதம்பரம்.
உங்கள் மகனுக்கு மகர லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். லக்னாதிபதி, குடும்பாதிபதி சனி பகவான் குடும்ப ஸ்தானத்தில் மூலத் திரிகோணம் பெற்று அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டையும், அங்கமர்ந்திருக்கும் சுக லாபாதிபதியான செவ்வாய் பகவானையும் பார்வை செய்கிறார்.
பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் மகர லக்னத்திற்கு யோக காரகராகி, சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் கேது பகவானுடன் இணைந்து தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டைப் பார்வை செய்கிறார்கள்.
ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில், வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே வீட்டில் அமரும் நிலை) அமர்ந்திருக்கும் அஷ்டமாதிபதியான சூரிய (புத ஆதித்ய யோகம்) பகவானுடன் இணைந்திருப்பது சிறப்பு.
தைரிய, அயன ஸ்தானாதிபதியான குரு பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக தன் ஆட்சி வீடான தைரிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் சூரிய (சிவராஜயோகம்) பகவானையும், புத பகவானையும், ஒன்பதாம் பார்வையாக களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டையும் பார்வை செய்கிறார்.
தற்சமயம் நடக்கும் குரு மஹாதசை இந்த ஆண்டு இறுதி வரை நடக்கும். தொடரும் சனி மஹாதசையில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு படிப்புக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். இந்த காலகட்டத்திற்குள் திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு வரவும்.