‘ஆழ்மனதின் அற்புத சக்திகள்’
‘நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய்’ என்றார் விவேகானந்தர். அதாவது மனதின் வலிமையே உடலின் வலிமை. நம் மனதிற்கு அத்தகைய சக்தி உண்டு. அத்தகைய மனதின் சக்தி குறித்த முழுமையான புரிதலை இப்புத்தகம் தருகிறது.
நம் மனநிலைகள் மூளையில் ஏற்படுத்தும் நான்கு வகை மின்னலைகள், அந்த அலைநிலைகளில் கிடைக்கப்பெறும் சக்தி, அத்தகைய உன்னத சக்தி நிலையை அடைய எளிய தியானப் பயிற்சிகள், அவை குறித்த அறிவியல் ரீதியான ஆராய்ச்சிகள் என 60 அத்தியாயங்களில் ஆசிரியர் எளிமையாக விளக்கியுள்ளார்.
குறிப்பாக நோய்களைக் குணப்படுத்தும் ஆழ்மன சக்தி குறித்த கட்டுரை வைரஸ் தொற்று மிகவேகமாகப் பரவி உலகையே அச்சுறுத்தி வரும் இந்த வேளையில் அதை எதிர்கொள்ளத் தேவையான மனவலிமையைப் பெற உதவும். முக்கியமாக கட்டுப்பாடின்றி மனம் போன போக்கில் வாழும் இன்றைய இளைய தலைமுறை படிக்கவேண்டிய புத்தகம். மனதை நம் வசப்படுத்தி அதன் சக்தியை முழுமையாக அறிந்து, நல் வழியில் பயன்படுத்தி வளமோடு வாழ்வோம்.
- ஆர். கீதாஞ்சலி